Tuesday, April 25, 2006

ஜாதிகள் உள்ளதடி பாப்பா'

நான் போன பதிவில் வைத்ததைப் போன்றே மேலுமொரு பதிவாகும். ஜாதிவெறி என்ற நச்சு, நிச்சயமாக அடிமனதிலிருந்து களையப்படவேண்டிய ஒன்றாகும்

சமீபத்தில் எனது வகுப்பாசிரியர் அவர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது வீட்டில் சந்திக்கச் சென்றிருந்தேன். வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன் . அழைப்பு மணியின் ஒலி கேட்டு கதவைத் திறந்தார் ஆசிரியர். என்னைக் கண்டதும் வரவேற்று நலம் விசாரித்தவாறே வீட்டின் வெளித் திண்ணையில் அமர்ந்து பேசினார். நானும் ஒருமணி நேரம் வாசலில் மரியாதையாக நின்றுகொண்டே பேசினேன்.

அப்போது ஆசிரியரின் துணைவியார் ஒரு கண்ணாடி டம்ளரில் காப்பியைக் கொண்டுவந்து "தம்பி எடுத்துக்கோ" என்று திண்ணையில் வைத்துவிட்டு போய் விட்டார். நானும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் காப்பியை குடித்து முடித்து டம்ளரை த் திண்ணையில் வைத்துவிட்டு, ஆசிரியரிடம் விடைபெற்று த் திரும்பும்பொழுது ஆசிரியரின் துணைவியார் ஆசிரியரை அழைத்து, "என்னங்க அந்த கண்ணாடி டம்ளரெ அந்த குப்பைத் தொட்டியிலே போட்டுடுங்கோ … ஆமாம் … அந்த பையன் கீழ்ஜாதிக்காரன் தானே?" என்றார் .

அதற்கு ஆசிரியரும், "நானும் அதையே தான் நினைத்தேன் … கொஞ்சம் பொறு ஒரு குச்சியிலே எடுத்துட்டு போயி போட்டுட்டு வர்றேன்" என்றார் ஆசிரியர்.

அதைக் கேட்ட எனக்கு நெஞ்சு திக்கென்றது. ச் … .சே என் குருவா இப்படி? வகுப்பில் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லிக் கொடுத்துவிட்டு மனதில் ஜாதிகள் உள்ளதடி என நினைக்கின்றார் என்று எனக்குள்ளேயே நொந்து வெளியேறினேன்.
-வஸந்த் பூபதி,வெள்ளாங்கோவில்.பிப்ரவரி, 27, 2000 (27/02/2000) (தினமலர்)

இந்தச் சிந்தனை மாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் அவருடைய மனதிலிருந்து பிறப்பால் நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் நீக்கப்படவேண்டும் . ஒருவனிடமிருக்கும் 'நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன்' என்ற எண்ணம், அவனுடைய அடிமனதிலிருந்து முற்றாக அகற்றப் படாதவரை அவனுடைய மனதை ஆட்சி செய்பவன் அவனல்லன்; ஜாதி வெறி பிடித்த அரக்கன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஜாதி வெறியைச் சட்டம் போட்டோ இரும்புக் கரம் கொண்டோ நிச்சயமாக ஒடுக்க முடியாது என்பதற்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டுதான் வஸந்த் பூபதியின் வேதனையில் வெந்த வரிகள் :

நான் உயர்ந்தவன்' என்ற இறுமாப்பு , மனிதனின் உள்ளத்தில் பதிந்து விடக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகக் கண்ணும் கருத்துமாய் இருக்கிறது.
லுக்மான் என்ற நல்லடியார் தன்னுடைய மகனுக்கு நல்லுபதேசம் செய்வதைப்போல் ஒரு சம்பவம் குர்ஆனில் காணக் கிடைக்கிறது::

31:18 ''( பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்."
தன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் விடுக்கும் எச்சரிக்கை :

17:37 "மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது".

'நான் பெருமைக்குரியவன்' என்ற அகங்காரத் திமிரை விட்டொழிப்பதை இஸ்லாம் அடிப்படைக் கல்வியாகியுள்ளது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
"கிட்டவராதேடா அபிஷ்டு" என்று திமிர்தனமாக விரட்டக்கூடிய ஜாதி வெறி பிடித்தவர்களும் நிறவெறி கொண்டலையும் வெள்ளையரும் வெட்கித் தலைகுனியும் படியான வேதவரிகளைப் பாரீர்

15:26 "(காய்ந்திருப்பின் சுண்டினால்) ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் (முதல்) மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்"
36:77 மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் (சிந்தித்துப்) பார்க்க வேண்டாமா? ...".

76:2 (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

19:67 "முன்னர் ஏதொன்றுமாக இல்லாதிருந்தவனை நிச்சயமாக நாமே படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?"

22:5 மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால் , (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்து, பின்னர் இந்திரியத்திலிருந்து, பின்பு கருவிலிருந்து, பின்பு அரைகுறை தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே (படிப்படியான மாறுதல்களை விவரிக்கிறோம்): மேலும் , நாம் நாடியதை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறையில் தங்கச் செய்கிறோம். பின்பு உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், உங்களில் (குறுகிய காலத்தில் உயிர் ) கைப்பற்றப் படுபவர்களும் (நீடித்து வாழ்ந்து) அறிவு பெற்றப் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்..."

உலக மனிதர்கள் அனைவருமே ஒரே அடிப்படையில் தான் பிறந்தோம் என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

உண்மை இவ்வாறிருக்க ,

"உன்னைப் போலவே பிறந்த சக மனிதனை, ' பிறப்பால் அவன் தாழ்ந்தவன்; நான் உயர்ந்தவன்' என்று ஏன் பிரித்துப் பார்கிறாய்?" என்பதுதான் ஏற்றத் தாழ்வு கற்பிப்போரை - வெள்ளாங்கோவில் வஸந்த் பூபதியின் ஆசிரியர் உட்பட - நோக்கி வீசப் படும் இறைவனின் கேள்வியாக இருக்க முடியும்
இந்த கேள்வியும் அதற்கான பதிலும் மனிதர்களின் மனதைத் தட்டுமானால்................
அதுவே நான் இந்த மார்க்கத்தை எற்றுக் கொண்டதன் லட்சியம்
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே...!!!