Friday, September 16, 2005

உதாசீனம் செய்வோம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும்!

உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு முயற்சியும் அல்லாஹ்வின் பாதையில் ஆகும்பொழுது ஈருலகுக்கும் வெற்றியாக அது அமையும். யார் நல்லவராக இருந்தோ அல்லது கெட்டவராக இருந்தோ யாருக்கும் எந்த பயனும் இல்லை. என்னுடைய கபரின் நிலைபாடு தனி உங்களுடைய கபரின் நிலைபாடும் தனி. அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் கப்ருடைய நிலைபாடும் தனித்தனியே. இந்த பூமியில் நமக்கு யார் ந்ல்லவர் யார் கெட்டவர் என்று எடைபோடுவது இல்லை நம்வேலை. அதை விட்டு பாரம்பரியமிக்க "தாஃவா" எனும் உன்னதமான ஒரு வேலையை அல்லாஹுதாலா நமக்கு வழங்கியிருக்கின்றான்



நான் இந்த பதிவு எழுதக் காரணம், எனக்கு தொடர்ச்சியாக "தமுமுககாரன் நல்லவனா" அல்லது "தவ்ஹீது ஜமாத்காரன் நல்லவனா" என்று அவர்கள் இவர்களைப் பற்றியும், இவர்கள் அவர்களைப் பற்றியும் எழுதும் மின் அஞ்சலை எல்லோருக்கும் அனுப்பியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் வாரியிறைக்கும் சேற்றிற்கு இடையில் நாம் ஏன் மூக்கை பிடித்துக்கொண்டு நிற்கவேண்டும். மேலும் யார் நல்லவர் கெட்டவர் என்று எடைபோடுவதும் நம் வேலையில்லை. அதற்காக நம் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்ய வேண்டிய அவசியமும் நமக்கில்லை. அதனால் இதுபோன்ற தரம் கெட்ட செய்திகளை நேரத்தை வீணாக்கி படிப்பதை விட உதாசீனம் செய்துவிட்டு சுபுஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறிக்கொண்டிருப்பது எவ்வளவோ சிறந்தது. இவர்கள் தமக்கு மட்டுமே உரியது என்று எண்ணிக்கொண்டிருக்கும் இஸ்லாத்தைவிட இஸ்லாம் மிகவும் தூய்மையானது, அப்பழுக்கற்றது!

இறைத்தூதர் முஹம்மது(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

சொல்வதற்கு மிகவும் எளிமையானது.
அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானது.
நாளை மறுமையின் தராசில் எடை அதிகமுள்ள வார்த்தை ஒன்றை நான் உங்களுக்கு கற்றுத்தரட்டுமா? அவை:

சுபஹானல்லாஹி வபிஹம்திக்க
சுபஹானல்லாஹிலழீம்.
என்பதை ஓதுவதுதான்!

எனவே, இப்படிப்பட்டவர்கள் அனுப்பும் மின் அஞ்சல்களை, எவருக்கும் மேற்கொண்டு அனுப்பாமல் அழித்து உதாசீனம் செய்வதே நம்மில் ஒற்றுமை ஏற்படச்செய்யும் ஒரு செயலாகும்.

இது தொடர்பான சில குர் ஆனின் வரிகள், நம் அனைவரின் சிந்தனைக்கு:


6:25.அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்;

6:26. மேலும் அவர்கள் (பிறரையும்) அதை (கேட்கவிடாது) தடுக்கிறார்கள்; இவர்களும் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்; அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் அவர்கள் (இதைப்) புரிந்து கொள்வதில்லை.

6:32. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

6;:52 அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.

6:68 .(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.

6:70 .(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்;, இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

இதுதான் மறுமையின் கூலியை எதிர்பார்க்கக்கூடிய முஸ்லிம்களுக்கு தேவை.

வஸ்ஸலாம்.

No comments: