Friday, September 16, 2005

உதாசீனம் செய்வோம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும்!

உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு முயற்சியும் அல்லாஹ்வின் பாதையில் ஆகும்பொழுது ஈருலகுக்கும் வெற்றியாக அது அமையும். யார் நல்லவராக இருந்தோ அல்லது கெட்டவராக இருந்தோ யாருக்கும் எந்த பயனும் இல்லை. என்னுடைய கபரின் நிலைபாடு தனி உங்களுடைய கபரின் நிலைபாடும் தனி. அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் கப்ருடைய நிலைபாடும் தனித்தனியே. இந்த பூமியில் நமக்கு யார் ந்ல்லவர் யார் கெட்டவர் என்று எடைபோடுவது இல்லை நம்வேலை. அதை விட்டு பாரம்பரியமிக்க "தாஃவா" எனும் உன்னதமான ஒரு வேலையை அல்லாஹுதாலா நமக்கு வழங்கியிருக்கின்றான்



நான் இந்த பதிவு எழுதக் காரணம், எனக்கு தொடர்ச்சியாக "தமுமுககாரன் நல்லவனா" அல்லது "தவ்ஹீது ஜமாத்காரன் நல்லவனா" என்று அவர்கள் இவர்களைப் பற்றியும், இவர்கள் அவர்களைப் பற்றியும் எழுதும் மின் அஞ்சலை எல்லோருக்கும் அனுப்பியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் வாரியிறைக்கும் சேற்றிற்கு இடையில் நாம் ஏன் மூக்கை பிடித்துக்கொண்டு நிற்கவேண்டும். மேலும் யார் நல்லவர் கெட்டவர் என்று எடைபோடுவதும் நம் வேலையில்லை. அதற்காக நம் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்ய வேண்டிய அவசியமும் நமக்கில்லை. அதனால் இதுபோன்ற தரம் கெட்ட செய்திகளை நேரத்தை வீணாக்கி படிப்பதை விட உதாசீனம் செய்துவிட்டு சுபுஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறிக்கொண்டிருப்பது எவ்வளவோ சிறந்தது. இவர்கள் தமக்கு மட்டுமே உரியது என்று எண்ணிக்கொண்டிருக்கும் இஸ்லாத்தைவிட இஸ்லாம் மிகவும் தூய்மையானது, அப்பழுக்கற்றது!

இறைத்தூதர் முஹம்மது(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

சொல்வதற்கு மிகவும் எளிமையானது.
அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானது.
நாளை மறுமையின் தராசில் எடை அதிகமுள்ள வார்த்தை ஒன்றை நான் உங்களுக்கு கற்றுத்தரட்டுமா? அவை:

சுபஹானல்லாஹி வபிஹம்திக்க
சுபஹானல்லாஹிலழீம்.
என்பதை ஓதுவதுதான்!

எனவே, இப்படிப்பட்டவர்கள் அனுப்பும் மின் அஞ்சல்களை, எவருக்கும் மேற்கொண்டு அனுப்பாமல் அழித்து உதாசீனம் செய்வதே நம்மில் ஒற்றுமை ஏற்படச்செய்யும் ஒரு செயலாகும்.

இது தொடர்பான சில குர் ஆனின் வரிகள், நம் அனைவரின் சிந்தனைக்கு:


6:25.அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்;

6:26. மேலும் அவர்கள் (பிறரையும்) அதை (கேட்கவிடாது) தடுக்கிறார்கள்; இவர்களும் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்; அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் அவர்கள் (இதைப்) புரிந்து கொள்வதில்லை.

6:32. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

6;:52 அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.

6:68 .(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.

6:70 .(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்;, இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

இதுதான் மறுமையின் கூலியை எதிர்பார்க்கக்கூடிய முஸ்லிம்களுக்கு தேவை.

வஸ்ஸலாம்.

Wednesday, September 14, 2005

பொட்டு வைத்தல்!

பிறமதத்தின் கலாச்சாரம்


பொட்டு வைத்தல் என்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்தது எப்படி ?

பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை என்பது இதன் பொருள்) தரவேண்டும் என சிவபெருமான் கேட்கிறார். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவ பெருமானின் நெற்றியில் வைக்கிறார்.


Pottu vaithal



அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது அன்னிய கலாச்சாரமாகும். ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது.

ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. மேலும் முதல்மரியாதை படம் ஒரு நிகழ்கால வரலாறு.

அதுமட்டுமல்ல திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் ஒட்டர் சமுதாயத்தில் தன் மகளை மணக்க விரும்பும் மணமகனிடம் மண்வெட்டும் கூடை நிறைய மண்ணை நிறைத்து அதை மணமகன் தானாகவே தூக்கி தலையில் வைத்து தூரமாகச் சென்று கொட்டி விட்டு வந்தால்தான் தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் இன்னும் உள்ளது. உண்மையில் இதுதான் உண்மையான தமிழனின் பழக்கமாகும்.

மேலும் இது வரதட்சணையை ஊக்குவிக்கக் கூடிய செயலாகும். ஆண்களில் இதுபோன்ற கையாளாகாத, தன்னம்பிக்கையிழந்த இளைஞர்களையும் பெற்றோர்களையும் உருவாக்கக் கூடியதாகும். இச்செயலால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கேடுகளை தன்மானமுள்ள எந்த இளைஞனாலும் ஏன் எந்த மனிதனாலும் அங்கீகரிக்க முடியாது.

வரதட்சணையை பற்றி இஸ்லாம் பெண்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு தெளிவான பாதையை வகுத்துள்ளது.

அல்லாஹ் தன் திருமறையில் நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் தொகையை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள் என்று கூறுகின்றான். (அல்குர்ஆன் : 4:4)

2) தாலிகட்டுவதும் இதுபோன்ற ஒரு செயல்தான் அது பெண்ணை அடிமை படுத்துகின்றது. இதற்கு புராணத்தில் என்ன கதை கூறப்படுகின்றது என்றால் திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது.

அதனடிப்படையில் ஒரு ஆணின் எதிரே பெண் வருவதை கண்டால் அவன் அவளின் கழுத்தை பார்த்து புரிந்து கொள்வான் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று. அதுபோல் அவளும் அவனுடைய காலைப் பார்த்து புரிந்து கொள்வாள் இவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று. (அது போல் திருமணம் ஆகாதவர்கள் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை அவர்கள் தான் கூறவேண்டும்.)

ஆனால் இஸ்லாம் திருகுர்ஆனில் 24:30.(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

24:31.இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;

என்று இருவருக்கும் சேர்த்து பொதுவாக கட்டளையிடுகின்றது.

உங்களின் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையை கட்டுப்படுத்தும் கற்பைக் காக்கும் யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும். என்று எமது இறைதூதரான முஹமது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம் : புகாரி

இந்த மனக்கட்டுப்பாடு முஸ்லிமான ஆண் பெண் எல்லோருக்கும் பொதுவான கட்டுப்பாடாகும். இதற்கெல்லாம் மேலாக இஸ்லாம் எந்த ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும் எந்த ஒரு சமூகத்தின் பண்பாட்டையும் பின்பற்றி வாழவேண்டும் என்று கூறவேயில்லை. தனக்கென்று ஒரு கலாச்சாரம் தனக்கென்று ஒரு பண்பாட்டை உருவாக்கி வைத்து அதனடிப்படையில் முஸ்லிம்கள் வாழவேண்டும் என்று வழியுறுத்துகின்றது. அவர்கள்தான் உண்மையான முஸ்லிம்கள் என்று இஸ்லாம் சான்றும் கூறுகின்றது. அப்படி பின்பற்றி நடக்காதவர்களை முஸ்லிம்கள் இல்லையென்று எச்சரிக்கையும் செய்கின்றது.

நபி (ஸல்)அவர்கள் "யார் பிற சமூகத்தை பின்பற்றுகின்றார்களோ அவர்கள் என்னை சார்ந்தவர்கள் இல்லை" என கூறினார்கள்.

இஸ்லாத்தில் மனித வாழ்க்கைக்கு அவசியமான தேவையான சட்டங்கள் இல்லையென்றால் பிற மதத்துடைய சட்டங்கள் தேவைப்படும். ஆனால் மனித சமுதாயத்திற்கு தேவையான முழுமையான சட்டங்கள் பூரணமாக இறைதூதரின் மேற்பார்வையிலேயே லட்சக்கணக்கான தோழர்களுக்கு மத்தியில் அரஃபா மைதானத்தில் நான் கொண்டு வந்த இறைச் செய்தியை முழுமையாக பூர்த்தியாக்கிவிட்டேனா என்று கேட்டு, அந்த தோழர்கள் ஆம் என்று செல்ல அல்லாஹ்வே நீ சாட்சி, அல்லாஹ்வே நீ சாட்சி, அல்லாஹ்வே நீ சாட்சியென சாட்சி கூறி சரித்திரமாக்கப் பட்டவையாகும். இதை அல்லாஹ்வும் அங்கீகரித்த வரலாறு உலக வரலாற்றிலேயே இஸ்லாத்திற்கு மட்டுமே உள்ள தனி சிறப்புகளில் ஒரு அங்கமாகும்.

இதை அல்லாஹ் இவ்வாறு அங்கீகரிக்கின்றான்.

5:3 இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;

ஆக, எல்லாம் பூர்த்தியாக்கப்பட்ட மார்க்கத்தில் வேறு மதத்தின் கொள்கைகளை ஏற்று நடப்பது பவமட்டுமல்ல, இஸ்லாத்திலிருந்து தூரமாக்கக் கூடிய பாரதூரமான செயலாகும். (அல்லாஹ் காப்பாற்றுவானாக.)

அதுபோலவே இந்துவை ஒரு முஸ்லிம் பெண் திருமணம் செய்து கொள்வதும் வாழ்க்கையில் ஒருபோதும் ஒத்துவராத காரியமாகும் ஏனென்றால் இரண்டும் மதமும் இரு துருவங்களாகும். இரண்டும் இரண்டு தன்டவாளங்களைப் போன்றதாகும். அது என்றுமே ஒன்று சேராதது. காரணம் இஸ்லாம் மதம் உயிர் உள்ளவரை ஒரே இறைவனை வணங்கவேண்டும் என ஓரிறை கொள்கையை போதிக்கக் கூடியது ஆனால் இந்து மதம் அப்படியல்ல.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது ஏட்டளவில் மட்டும்தான். தெருவுக்கொரு தெய்வம் என்பது மாறி வீட்டுக்கொரு தெய்வமாகி விட்ட நிலையில் புதிய தம்பதிகளான இவர்கள் ஏதாவது ஒரு மதத்தை தேர்ந்து எடுக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்தமாக தள்ளப்படுகின்றனர். இல்லையென்றால் குழந்தைகளின் எதிர் காலம் பாதிக்கப்படும். அந்த குழந்தையை எந்த மதத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும், பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும் போன்ற சட்டப் பிரச்சனைகளையும் சிந்திக்க வேண்டியுள்ளன. மோகம் முப்பது நாட்கள் ஆசை அறுபது நாட்கள் என்பார்கள் ஆக தொன்நூறு நாட்கள் முடிந்த பிறகு சிந்திக்க வேண்டியதை இஸ்லாம் முன் கூட்டியே சிந்திக்க தூண்டுகின்றது.