Thursday, June 22, 2006

வேண்டாம் இன்னும் அடிமை(வேஷ)த்தனம்.

மதம் அல்லது மார்க்கம் என்பது மனிதனை மனிதனாக மதிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். சக மனிதனை மிருகமாகவும் காட்டுமிராண்டியாகவும் அல்லது தன்னை விட மட்டமாகவும் கருதுவதை அல்லது அந்த கருதுதலை நியாயப்படுத்தி கடமையாக்குவதை ஒருபோதும் மார்க்கமாகக் கருதமுடியாது.

ஏனெனில் அது மனிதனை நற்சிந்தனைக்கு பதிலாக தீய வழிக்கே இட்டுச் செல்லும் மத நம்பிக்கை இல்லாத எந்த மனிதனும் இந்த உலகில் இல்லை. அப்படி தன் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய அந்த மதத்தை மற்றவர்கள் விமர்சிப்பதும் அதற்கு பதில் இல்லாமல் விமர்சிக்கக்கூடிய விமர்சனத்திற்கு பதில் தராமல் விமர்சிக்கக்கூடியவர்களை கெட்டவர்கள் என்று தூற்றுவதும் எந்த விதத்தில் நியாயம்.

ஒரு கடைக்காரன் தன் பொருள் நல்லபொருள் என்று சொல்லாமல் பக்கத்து கடைக்காரனின் பொருள் மோசமானது என்று சொல்வது எப்படி சரியில்லாத வழிமுறையோ அதுபோலத்தான் இதுவும்.

இதை நன்கு சிந்திக்கக்கூடியவன் என்ன செய்வானோ அதைத்தான் நான் செய்தேன். இந்து மதத்திலிருந்து விரக்தியுற்று பிரிந்தவர்கள்தான் நாத்திகர்கள். அதாவது தமிழகத்தின் பூர்வீக குடிமக்கள். அதாவது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்கள். இயற்கையை கடவுளாக வணங்கக்கூடியவர்கள் (தமிழர்கள்) ஆனால் அவர்களிடம் தற்போது பாக்கியுள்ளது என்ன?

தமிழர்திருநாள் பொங்கல் மட்டுமே பாக்கியுள்ளது. அதாவது போகிப்பண்டிகை, பொங்கல்திருநாள், மாட்டுப்பொங்கல் இந்த மூன்று திருநாள்களை தவிர அந்த தமிழர்களை கடந்து செல்லக்கூடிய வருடத்தின் 362 நாட்களும் யாரோ (வந்தேறிகள்) நம்மீது புகுத்தியது; திணித்ததாகும். இதை ஒத்துக்கொள்ளாத எந்த தமிழ்மனம் உண்டு?

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு. அந்த இனமும் அதற்கான குணமும் இப்பொழுது எங்கே? வரதட்சணை கொடுத்து திருமணம், மகளின் பூப்புனித நீராட்டுவிழா, விநாயகர் ஊர்வலம், இறந்தவர்களுக்கு திவசம், நல்ல நாள் பார்ப்பது இதுபோல் இன்னும் பலபல ……. இவையெல்லாம் தமிழகத்துக்குள் புகுந்தது எப்படி? எப்பொழுது? உண்மை நிலை என்னவெனில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, படிக்காத மேதை காமராஜர் ஆகியோருக்கு பிறகு ஒரு தமிழன் கூட தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதுதான் உண்மை. தந்தை பெரியாருக்கு பிறகு அந்த பாசறையில் வந்த தலைவர்கள் எங்களுக்கு நாற்காலி கிடைத்தால் போதுமென்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இந்த சமூகத்திற்குள் அவர்களால் பிடித்து நிற்க வழி தெரியவில்லை. அல்லது வழி நடத்த தகுதியற்றவர்களாக மாறிவிட்டனர்.

தமிழுக்கென்ற மரியாதையை தமிழன் கொடுக்கவில்லை. அதனால் வந்தேறிகள் தமிழகத்தில் புகுந்து கொண்டு தமிழர்களுக்காகப் போராடுகின்றோம் என்ற போர்வையில் தங்களின் சித்தாந்தத்தை உள்ளே வாழைப்பழத்தில் விஷ ஊசியை ஏற்றுவதைப் போல் ஏற்றி நாசமாக்கி விட்டனர். விளைவு? அந்த இனத்தையும் குணத்தையும் யாராவது எங்காவது கண்டால் தயவு செய்து தமிழ்மணத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் என்ற நிலையாகி விட்டது.

அதன் விளைவில் ஒன்றைத்தான் இன்று தமிழர் சமூகம் வரதட்சணை என்ற பெயரில் அனுபவிக்கிறது. இதனைக் கொடுக்க முடியாமல் எம் சகோதர கன்னிப்பெண்கள் ஜன்னலோர தேய்நிலவாக கண்ணீரில் குளிக்கின்றனர். ஆச்சாரம் என்ற பெயரில் யாரோ அவிழ்த்துவிட்ட அனாச்சார கட்டுக்கதைகளால் சம்பாதிக்கக்கூடிய குறைந்த தொகையில் கணிசமான ஒரு பகுதியை கோவிலில் அர்ச்சனைக்காக அவாள்களிடம் எதிர்பார்ப்பின் கண்ணீரோடு தாரைவார்க்கின்றான் தமிழன். தமிழன் புரிந்து கொள்ளவேண்டும் இந்த ஒட்டுண்ணிகளின் வயிறு வளர்க்கும் தந்திரங்களை. தமிழா உன்னை நீ புரிந்துகொள்.

வேண்டாம் இன்னும் அடிமை(வேஷ)த்தனம்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..!!

அதற்காக,

இதோ இருகரம் நீட்டி உங்களை அன்புடன் வரவேற்கின்றது இஸ்லாம்.

Tuesday, April 25, 2006

ஜாதிகள் உள்ளதடி பாப்பா'

நான் போன பதிவில் வைத்ததைப் போன்றே மேலுமொரு பதிவாகும். ஜாதிவெறி என்ற நச்சு, நிச்சயமாக அடிமனதிலிருந்து களையப்படவேண்டிய ஒன்றாகும்

சமீபத்தில் எனது வகுப்பாசிரியர் அவர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது வீட்டில் சந்திக்கச் சென்றிருந்தேன். வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன் . அழைப்பு மணியின் ஒலி கேட்டு கதவைத் திறந்தார் ஆசிரியர். என்னைக் கண்டதும் வரவேற்று நலம் விசாரித்தவாறே வீட்டின் வெளித் திண்ணையில் அமர்ந்து பேசினார். நானும் ஒருமணி நேரம் வாசலில் மரியாதையாக நின்றுகொண்டே பேசினேன்.

அப்போது ஆசிரியரின் துணைவியார் ஒரு கண்ணாடி டம்ளரில் காப்பியைக் கொண்டுவந்து "தம்பி எடுத்துக்கோ" என்று திண்ணையில் வைத்துவிட்டு போய் விட்டார். நானும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் காப்பியை குடித்து முடித்து டம்ளரை த் திண்ணையில் வைத்துவிட்டு, ஆசிரியரிடம் விடைபெற்று த் திரும்பும்பொழுது ஆசிரியரின் துணைவியார் ஆசிரியரை அழைத்து, "என்னங்க அந்த கண்ணாடி டம்ளரெ அந்த குப்பைத் தொட்டியிலே போட்டுடுங்கோ … ஆமாம் … அந்த பையன் கீழ்ஜாதிக்காரன் தானே?" என்றார் .

அதற்கு ஆசிரியரும், "நானும் அதையே தான் நினைத்தேன் … கொஞ்சம் பொறு ஒரு குச்சியிலே எடுத்துட்டு போயி போட்டுட்டு வர்றேன்" என்றார் ஆசிரியர்.

அதைக் கேட்ட எனக்கு நெஞ்சு திக்கென்றது. ச் … .சே என் குருவா இப்படி? வகுப்பில் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லிக் கொடுத்துவிட்டு மனதில் ஜாதிகள் உள்ளதடி என நினைக்கின்றார் என்று எனக்குள்ளேயே நொந்து வெளியேறினேன்.
-வஸந்த் பூபதி,வெள்ளாங்கோவில்.பிப்ரவரி, 27, 2000 (27/02/2000) (தினமலர்)

இந்தச் சிந்தனை மாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் அவருடைய மனதிலிருந்து பிறப்பால் நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் நீக்கப்படவேண்டும் . ஒருவனிடமிருக்கும் 'நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன்' என்ற எண்ணம், அவனுடைய அடிமனதிலிருந்து முற்றாக அகற்றப் படாதவரை அவனுடைய மனதை ஆட்சி செய்பவன் அவனல்லன்; ஜாதி வெறி பிடித்த அரக்கன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஜாதி வெறியைச் சட்டம் போட்டோ இரும்புக் கரம் கொண்டோ நிச்சயமாக ஒடுக்க முடியாது என்பதற்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டுதான் வஸந்த் பூபதியின் வேதனையில் வெந்த வரிகள் :

நான் உயர்ந்தவன்' என்ற இறுமாப்பு , மனிதனின் உள்ளத்தில் பதிந்து விடக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகக் கண்ணும் கருத்துமாய் இருக்கிறது.
லுக்மான் என்ற நல்லடியார் தன்னுடைய மகனுக்கு நல்லுபதேசம் செய்வதைப்போல் ஒரு சம்பவம் குர்ஆனில் காணக் கிடைக்கிறது::

31:18 ''( பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்."
தன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் விடுக்கும் எச்சரிக்கை :

17:37 "மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது".

'நான் பெருமைக்குரியவன்' என்ற அகங்காரத் திமிரை விட்டொழிப்பதை இஸ்லாம் அடிப்படைக் கல்வியாகியுள்ளது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
"கிட்டவராதேடா அபிஷ்டு" என்று திமிர்தனமாக விரட்டக்கூடிய ஜாதி வெறி பிடித்தவர்களும் நிறவெறி கொண்டலையும் வெள்ளையரும் வெட்கித் தலைகுனியும் படியான வேதவரிகளைப் பாரீர்

15:26 "(காய்ந்திருப்பின் சுண்டினால்) ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் (முதல்) மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்"
36:77 மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் (சிந்தித்துப்) பார்க்க வேண்டாமா? ...".

76:2 (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

19:67 "முன்னர் ஏதொன்றுமாக இல்லாதிருந்தவனை நிச்சயமாக நாமே படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?"

22:5 மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால் , (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்து, பின்னர் இந்திரியத்திலிருந்து, பின்பு கருவிலிருந்து, பின்பு அரைகுறை தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே (படிப்படியான மாறுதல்களை விவரிக்கிறோம்): மேலும் , நாம் நாடியதை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறையில் தங்கச் செய்கிறோம். பின்பு உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், உங்களில் (குறுகிய காலத்தில் உயிர் ) கைப்பற்றப் படுபவர்களும் (நீடித்து வாழ்ந்து) அறிவு பெற்றப் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்..."

உலக மனிதர்கள் அனைவருமே ஒரே அடிப்படையில் தான் பிறந்தோம் என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

உண்மை இவ்வாறிருக்க ,

"உன்னைப் போலவே பிறந்த சக மனிதனை, ' பிறப்பால் அவன் தாழ்ந்தவன்; நான் உயர்ந்தவன்' என்று ஏன் பிரித்துப் பார்கிறாய்?" என்பதுதான் ஏற்றத் தாழ்வு கற்பிப்போரை - வெள்ளாங்கோவில் வஸந்த் பூபதியின் ஆசிரியர் உட்பட - நோக்கி வீசப் படும் இறைவனின் கேள்வியாக இருக்க முடியும்
இந்த கேள்வியும் அதற்கான பதிலும் மனிதர்களின் மனதைத் தட்டுமானால்................
அதுவே நான் இந்த மார்க்கத்தை எற்றுக் கொண்டதன் லட்சியம்
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே...!!!